திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: தமிழக - கர்நாடக போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால், தமிழக - கர்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன்  கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த சரக்கு லாரி இன்று காலை 21வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல்  நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்திலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. லாரி பழுது காரணமாக காலை 8 மணி முதல் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: