பரமக்குடி: பரமக்குடி நான்குவழி சாலை ஓரங்களில் அரசு மருத்துவமனை மாத்திரைகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் நான்குவழி சாலையோரம் தமிழக அரசால் வழங்கக்கூடிய மாத்திரைகள் சிதறி கிடப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போது அரசு சார்பில் வழங்கப்படும் காய்ச்சல், சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்க்கான 1000க்கும் மேற்பட்ட மாத்திரை அட்டைகள் கேட்பாரற்று சாலையோரங்களில் சிதறி கிடந்தன. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.