திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

சென்னை: 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நவராத்திரி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, இன்று முதல் நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் வேதவல்லி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள்ளேயே உட்புறப்பாடு நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

நவராத்திரி உற்சவத்தின் முதல்நாளான இன்று மாலை 6 மணிக்கு கமல வாகனத்தில் உட்புறப்பாடு நடக்கிறது. நாளை கிளி வாகனத்திலும், 19ம் தேதி சேஷ வாகனத்திலும், 20ம் தேதி யாளி வாகனத்திலும், 21ம் தேதி கேடய வாகனத்திலும், 22ம் தேதி கேடய வாகனத்திலும், 23ம் தேதி அம்சா வாகனத்திலும், 24ம் தேதி கேடய வாகனத்திலும், இறுதியாக 25ம் தேதி கேடய வாகனத்திலும் உட்புறப்பாடு நடக்கிறது. இந்த உட்புறப்பாட்டின் போது பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. உற்சவத்தையொட்டி, கோயிலில் வேதவல்லி தாயார் சன்னதியில் தினமும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: