தனியாக செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்

பூந்தமல்லி: சென்னை தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் வேலை முடித்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இது குறித்து மதுரவாயல் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில், மதுரவாயல் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில், மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த தேவகுமார் (23), பிரகாஷ்ராஜ் (19), ராமன் (20) என்பது தெரியவந்தது.  

இவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை வழிமறித்து  கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பது மற்றும் பேசி கொண்டு செல்லும்  வாலிபர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை மதுரவாயல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: