வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆதனூர் அடையாறு கால்வாய் ஆரம்ப நிலையத்தில் இருந்து நடக்கும் தடுப்பணை பணிகள், வரதராஜபுரம் மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், அட்டை தொழிற்சாலை பாலம், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் வெள்ள தடுப்பு, தடுப்பணை கட்டுதல் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.

அப்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி இந்த அடையாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் தண்ணீர் புகாத வண்ணம் அனைத்து வகையான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது என்றார். மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, நீர்வள மேலாண் திட்ட செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் குஜராத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாம்பரம்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திர ரெட்டி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள தடுப்புப் பணிகளை பார்வையிட்டார். இதில், தாம்பரம்-முடிச்சூர் சாலை, பாப்பன் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்ட பணீந்திர ரெட்டி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: