படப்பிடிப்பில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகர்கள் மீது தாக்குதல்: சூர்யாதேவி மீது போலீசில் புகார்

பூந்தமல்லி: படப்பிடிப்பில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகர்களை அடியாட்களுடன் வந்து தாக்கியதாக சூர்யாதேவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர், நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் வீரப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் சின்னத்திரை நடிகை ஷீபாவுடன் சேர்ந்து யுடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் சூர்யாதேவி தனது ஆட்களுடன் உள்ளே புகுந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்று விட்டதாகவும், இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன் இருந்த நடிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த விடியோவில் பேசிய நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமார் திருமணத்தின்போது சூர்யாதேவிக்கும், வனிதாவுக்கும் இடையே யுடியூப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், நான் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருந்ததாக கூறி சூர்யாதேவி தனது ஆட்களுடன் வீட்டிற்குள் புகுந்து தங்களை தாக்கி விட்டுச் சென்றதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து நாஞ்சில் விஜயன் மற்றும் சக நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயன் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: