சென்னை : தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்: அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா,அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது. என்போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை. அரசிடம் கேட்டே செயல்படுகிறேன். உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்.
இந்த நிதி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம்.தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்: அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. 69% இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம், என்று தெரிவித்துள்ளார்.