துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரி எழில்முகநகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் மின் தடை ஏற்பட்டு இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் புகார் அளித்தனர். இதனால், ஒரு வருடத்துக்கு முன்பு, அப்பகுதியில் வேறொரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரிலிருந்து இங்குள்ள வீடுகளுக்கு உயரழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி, குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்தது.