உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2003 பேட்ச் காவலர்கள் ரூ.25 லட்சம் நிதி உதவி: கமிஷனர் வழங்கினார்

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய சரவணகுமார் (37), சிறுநீரக குறைபாடு காரமணாக சிகிச்சை பலனின்றி கடந்த 18.8.2020 அன்று உயிரிழந்தார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், கோபிகா மற்றும் பிரியங்கா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு சரவணகுமாருடன் பணியில் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் இணைந்து, உயிரிழந்த சரவணகுமார் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தனர்.

இந்த பணத்தில் 20 லட்சத்து 90 ஆயிரத்து 618 ரூபாய் சரவணகுமாரின் இரு மகள்கள் பெயரில் எல்ஐசி பாலிசியாகவும், மீதமுள்ள 4 லட்சத்து 23 ஆயிரத்து 387 ரூபாய் அவரது மனைவி இந்துமதிக்கும் தர ஏற்பாடு செய்யப்பட்டது. இதுதவிர சவரணகுமார் மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடும் எடுத்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், சரவணகுமாரின் குடும்பத்தினரை நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, சக காவலர்களிடம் வசூலித்த 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கான குடும்ப நலத்திட்ட ஆவணங்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

Related Stories: