சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 36ஆக உயர்வு: அம்பத்தூரில் 16 தெருக்களில் கட்டுப்பாடு

சென்னை: சென்னையில் கடந்த மாதம் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் சமீப காலமாக தொற்று குறைந்த வந்த காரணத்தால் கட்டுப்பாடு பகுதிகளே இல்லை என்று செப்டம்பர் 18ம் தேதி மாநகராட்சி அறிவித்தது.

ஆனால், கொரோனா பரவல் அதிகரித்தபடியே இருந்தது. இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி நிலவரப்படி சென்னையில் 10 கட்டுப்பாடு பகுதிகள் இருந்தது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி திரு.வி.க.நகர் மண்டலத்தில் 3 பகுதிகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 16 பகுதிகளும், அண்ணா நகரில் ஒரு பகுதியும், தேனாம்பேட்டையில் 2 பகுதியும், கோடம்பாக்கத்தில் 3 பகுதியும், வளசரவாக்கத்தில் ஒரு பகுதியும், ஆலந்தூரில் 4 பகுதியும், அடையாற்றில் 4 பகுதியும், சோழிங்கநல்லூரில் 2 பகுதியும் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: