ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலி என்கவுன்டரில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 அப்பாவி இளைஞர்களின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள அம்ஷிபுரா கிராமத்தின் வனப்பகுதியில் கடந்த ஜூலை 18ம் தேதி மூன்று தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. பிரேத பரிசோதனைககு பின்னர் மூன்று பேரின் சடலங்களும் புதைக்கப்பட்டன. ஆனால், கொல்லப்பட்ட மூன்று பேரும் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்றும், அம்ஷிபுராவில் காணாமல் போனதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே, சோபியானில் வேலை செய்து வந்த மூன்று பேரும் காணாமல் போனதாக பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானதை தொடர்ந்து, ராணுவம் விசாரணை நடத்தியது. அதில், கொல்லப்பட்ட 3 இளைஞர்களும் அப்பாவிகள் என்பது உறுதியானது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் அறிவித்தது.