நீட் தேர்வு எழுதும் மாணவிகளின் ஆபரணங்களை அகற்ற தடை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: நாடு முழுவதும் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது, பர்ஸ் வைத்திருக்க கூடாது, வாட்ச் அணிய கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையை சேர்ந்த வக்கீல் அரவிந்த்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள், புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுகிறது. தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்ட விரோதமானது. எனவே, இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும். ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்க கூடாது என்றும் உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: