நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிட விதித்த தடையை நீட்டிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் சக்ரா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆக்‌ஷன் படத்தை தயாரித்த ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, சக்ரா’’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவத்திற்காக தான் நடித்த ‘’ஆக்‌ஷன்’’ திரைப்படம் போதிய லாபம் ஈட்டியுள்ளதாகவும்,  ‘’சக்ரா’’ திரைப்படம் தொடர்பாக ‘’ஆக்‌ஷன்’’ பட தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் போடாததால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது, டிரைடெண்ட் நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: