சென்னை: கொரோனா தொற்று காலத்தில் சென்னை மாநகராட்சி சமூக நல மையங்கள் மூலம் 4,431 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களை சுகாதாரத்துறை வகைப்படுத்தி பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழிகாட்டுதல்படி கொரோனோ தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் முடிவில் கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று இருப்பது என்பது உறுதி செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் ராயபுரம் அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.