தஞ்சை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தற்போது டெல்டா மாவட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுச்சாலையில் செங்கிப்பட்டி என்னும் இடத்தில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மத்திய அரசு தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு வஞ்சிக்கும் வகையில் சட்டங்களை கொண்டு வருவதாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.குறிப்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாலையில் படுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.