குழந்தை இல்லாததால் விரக்தி நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: குழந்தை இல்லாத விரக்தியில், நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, பள்ளத் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (32).  கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (28). கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.  தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில், சந்தோஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவர், வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு செல்வார். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்க தகராறு ஏற்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ், மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது விமலா, நாம் இருவரும் குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது நீங்கள் மது அருந்திவிட்டு வருகிறீர்களே என கண்டித்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சந்தோஷ் வீடு திரும்பினார். அப்போது விமலா, படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விமலாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: