சாஸ்திரி பவன் முன்பு விவசாய சட்ட நகல் எரித்து போராட்டம்: மே 17 இயக்கத்தை சேர்ந்த 80 பேர் கைது

சென்னை: மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு விவசாய சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தை சேர்ந்த 80 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் விவசாய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தும் போராட்டங்களும் அறிவித்துள்ளன.

இதனிடையே விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை நேற்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தி விவசாய சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.

அதைதொடர்ந்து சாஸ்திரிபவன் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நூற்றுக்கும் ேமற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளுடன் ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது மத்திய அரசு இரு அவைகளிலும் தாக்கல் செய்த விவசாய சட்ட நகல் மசோதாவை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனைவரையும் போலீசார் நேற்று மாலை விடுவித்தனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் சாஸ்திரி பவன் அருகே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுட்டதால் மே 17 இயக்கம் மற்றும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 80 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஐபிசி 287, 268, 269, 144 தடை உத்தரவை மீறியது, 41 சிட்டி போலீஸ் ஆக்ட் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: