தமிழகத்தில் ஊரக பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி கோரி வழக்கு

சென்னை: தோழர் சட்ட மையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டுவந்தது. ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை. தூய்மை தொழிலாளர்களுக்கு  தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினேன். இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கமத்திய அரசு பரிந்துரைத்தது.

ஆனால், இந்த பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் தூய்மை பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குமாறும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குமாறும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் அக்டோபர் 16ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: