சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை நேற்று திடீரென பெருமளவு குறைந்தது. விமான நிலையத்தில் இ-பாஸ் கவுன்டர்களில் ஏற்பட்ட குழப்பமே காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன. கடந்த திங்கள்கிழமை 128 விமானங்கள் இயக்கப்பட்டு 13 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். நேற்று 121 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சுமார் 8 ஆயிரம் பேரே பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஐதராபாத்திலிருந்து காலை 7.30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் நேற்று இரவு வரை ஒருவர் கூட முன்பதிவு செய்யவில்லை. எனினும் காலை 6 பேருடன் விமானம் சென்னை வந்தது.