மின்சார பல்ப், வேர்க்கடலை திருட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மின்சார பல்ப், வேர்க்கடலை திருட முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். உத்திரமேரூர் அடுத்த பட்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம் (60). அதே பகுதியில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறிகளை பயிரிட்டுள்ளார். இங்கு காட்டு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால், விவசாய நிலத்தை சுற்றி, மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், உத்திரமேரூர் வாணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (25). கொத்தனார். நேற்று முன்தினம் இரவு முனியப்பன், பட்டஞ்சேரி கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள ஆனந்தசெல்வத்தின், விவசாய நிலத்தில் இருந்த மின்சார வேலியில் நுழைய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதேப் போல் உத்திரமேரூர் அடுத்த எல் எண்டத்தூர் கிராமத்தில் நாராயணன் என்பவர், 6 ஏக்கர் விவசாய நிலத்தினை குத்தைக்கு எடுத்துள்ளார். அங்கு கத்திரிக்காய் வேர்க்கடலை ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். இங்கு பயிரிட்டுள்ள காய்கறிகளை, எலிகள் நாசம் செய்கின்றன. இதனால், நாராயணன், மின்வேலி அமைத்துள்ளார். இந்தவேளையில், எண்டத்தூர் கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்த கோபி (46) என்பவர், நேற்று முன்தினம் இரவு, நாராயணனின் விவசாய நிலத்தில் உள்ள வேர்க்கடலையை பறிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரும், மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில், ஆனந்தசெல்வத்தின், விவசாய நிலத்தில், வெளிச்சத்துக்காக, மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதனை, முனியப்பன் திருட முயன்றுள்ளார். மின்வயதில் உள்ள பல்ப்பை கழற்ற முயன்றபோது, மின்வேலியில் அவர் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நிலத்தின் குத்தகைதாரர் ஆனந்தசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: