கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்பதை தடுக்க ரேசன் கடைகளில் சிசிடிவி கேமரா: ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கள்ளச்சந்தையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த சிரில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 32 ஆயிரத்து 722  ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய  உணவுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. மேலும் மலிவு விலையில் சர்க்கரை வழங்க மாதம்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கோதுமை 34 ஆயிரத்து 890 மெட்ரிக் டன் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டு  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவுதல் காரணமாக தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி,பருப்பு எண்ணெய்,கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது. ஆனால் பயனாளர்களுக்கு இது முழுமையாக சென்றடையவில்லை. குறிப்பாக ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது. இதை தடுக்க அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: