சென்னை: மத்திய அரசு கொண்டு வர உள்ள விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள், பெரும் வணிகர்களும் இடைத்தரகர்களை தான் ஆதாயம் பெறுவார்கள் என்பதற்கு கரும்பு மற்றும் கோழிப்பண்ணை விவசாயிகளே இதற்கு ஆதாரம் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்த சாகுபடி எங்கே செய்தாலும் தோல்வியில் தான் முடிகிறது என்பதற்கு கோழிப்பண்ணை விவசாயிகளே ஆதாரமாக இருக்கும் போது இது பிரதமருக்கும், முதல்வருக்கும் தெரியாதா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விவசாய மசோதாக்கள் விவசாயத்துக்கு எதிரானவை என்பதால் அவற்றுக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து வலியுறுத்தியுள்ளார்.
விவசாய மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் 25-ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியும் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைப்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழக விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர். விவசாய நிலங்களை விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.