திருச்செந்தூர் தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் கார் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி:  திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் கார் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தினர். பின்னர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதியவான இந்த காட்சிகளை கொண்டு மெய்ஞானபுறம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தட்டார்மடம் அருகே செல்வம் என்பவர் காரில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்ததோடு 300க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் அவர் போராட்டத்திலும் பங்கேற்றார். இந்த நிலையில், அவரது கார் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திருப்பது திருச்செந்தூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: