மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை: பட்டாபிராமில் சோகம்

பட்டாபிராம்: பட்டாபிராமில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரவி (46). காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாந்தி(40). இவர்களுக்கு பவித்ரா (21)  என்ற மகள் இருந்தார். இவரும் திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (23) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில், பவித்ரா கணவர் அரவிந்தனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 15ம் தேதி பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு சில நாட்களில் அரவிந்தனும் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, ரவி மகள் பவித்ரா இறந்த துக்கம் தாங்காமல் மனம் உடைந்த நிலையில் இருந்தார். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை சாந்தி வீட்டிலிருந்து புறப்பட்டு கொரட்டூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த ரவி  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பட்டாபிராம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: