மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கோயில் குளம், கடலில் நீராடி தர்பணம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில், இந்துக்கள் கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நாளில் முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களை படையலிட்டு வழிபடுவார்கள்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்தகுளம், தாயார் அம்மன் குளம், திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் குளம், செங்கல்பட்டு வேதாந்த தேசிக பெருமாள் கோயில், திருப்போரூர் முருகன் கோயில் குளம், வல்லக்கோட்டை முருகன் கோயில் குளம், மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் செய்யப்பட்டது.  ஆயிரக்கணக்கானோர் குளம், கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

காற்றில் பறந்த சமூக இடைவெளி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் உள்பட சில கோயில் குளத்தில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனாலும், கல்பாக்கம் கடற்கரை மற்றும் சில கோயில்களில் ஊரடங்கு எச்சரிக்கையை மீறி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஏராளமானோர் கடலில் நீராடி வழிபட்டனர்.

Related Stories: