பணியின் போது உயிரிழந்த காவலர்களின் 96 குழந்தைகளுக்கு 10.75 லட்சம் கல்வி நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் வழங்க சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் முன் வந்தனர். இதற்கான நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. அதில், கடந்த 2 ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களை சேர்ந்த 96 குழந்தைகளுக்கு 10.75 லட்சம் நிதி உதவியை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். அப்போது மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் சுதாகர், மல்லிகா, துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது: பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சமுதாயநலக் கூடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று 10 நாட்களில் பரங்கிமலை மற்றும் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குளிரூட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்த காவலர் ஒருவரின் மகள் பிரியதர்ஷினி பிளஸ் 2 முடித்துவிட்டு, பண வசியின்றி மேற்படிப்பு படிக்க முடியாமல் இருந்தார். உடனே நான் அதிகாரிகளுடன் பேசி அந்த மாணவிக்கு அவர் விரும்பிய கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தேன்.

அதை தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் 96 மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க 10.75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 123 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் அனுமதி சீட்டு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: