சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடியை சந்தித்து நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியை நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா தலைமை செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முதல்வருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதை அதிகரிப்பது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, சுய உதவிக் குழுக்களை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.