×

சேலைகளில் வண்ணம் தீட்டலாம் சிறப்பான வருமானம் பார்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

பெண்கள் எப்போதுமே அழகியலை விரும்புபவர்கள். அவர்கள் அணியும் ஆடைகளில் அழகிய கலைவண்ணத்தை விரும்புவார்கள். அந்த  வகையில், ஃபேப்ரிக் பெயின்டிங் சேலைகளுக்கு நல்ல மவுசு எப்போதும் உண்டு. கலை ஆர்வம் உள்ள பெண்கள் சேலைகளில் ஃபேப்ரிக்  பெயின்டிங் செய்யக் கற்றுக் கொண்டால், வீட்டில் இருந்தபடியே நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கலாம் என்கிறார் சென்னையைச்  சேர்ந்த உஷா. “ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இதனைக் கற்றுக்கொண்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களுக்கு முதலில்  இலவசமாக ஃபேப்ரிக் பெயின்டிங் செய்து கொடுத்தேன். அதனை அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். அதனைப் பார்த்த பலரும்  எங்களுக்கும் செய்து கொடுங்களேன் என்று கேட்க, அதையே தொழிலாக மாற்றிவிட்டேன். இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு  கற்றுக்கொடுத்து அவர்களையும் ஒரு தொழில்முனைவோராக மாற்றிக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே வாய்ப்புள்ள தொழில் என்பதால்  லாபம் நிச்சயம்.

பெண்களின் தேவைகளுக்கு பெண்களாலேயே செய்யக்கூடிய நல்ல பல தொழில்கள், சிறு தொழில்கள் ஏராளம் உள்ளன. நம்மால்  முடியாதது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு துணியில் வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் என்பவற்றுக்கு  முறையான பயிற்சியும் நல்ல கைத்திறனும் இருந்தால் போதும். நேர்த்தியான படைப்பு, தரமான ஃபேப்ரிக் பெயின்ட் ( Fabric paint)  கொண்டு துணி மற்றும் பொருட்களின் மீது வண்ணம் தீட்டினால், நல்ல லாபம் தரும் தொழில். நிரந்தரமான வாடிக்கையாளர்களையும்  பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

அனைத்து உடைகளிலும் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனைபேரும் உபயோகிக்கக்கூடிய அன்றாட பொருட்கள், கைக்குட்டை, பெல்ட்,  ஹேர்பேண்ட், காலணிகள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்திலும் வண்ணம் தீட்டலாம். கண் பார்த்ததை கை செய்யும் என்கிற பழமொழி  கற்பனையுடன் கூடிய எந்த தொழிலுக்கும் பொருந்தாது. அதனால்தான் எம்பிராய்டரி துணிகளில் வரைகலை ஓவியம் போன்றவைகளை  செய்யும் நபரின் தனித்துவம் பளிச்சென்று தெரிய அவர்கள் மற்றவர்களிலிருந்து மிளிர்கிறார்கள்.துணிகளில் ஓவியம் தீட்டுவது  பெண்களுக்கு முக்கியம் என என் உள்ளுணர்வு கூறியதால் இதிலும் என் கலை ஆர்வம் தொடங்கியது. என்னுடைய 20 ஆண்டு  அனுபவத்தில் பல பெண்களுக்கு நான் கற்றுக்கொண்ட கலையைக் கற்றுத் தந்திருக்கிறேன். இன்றும்கூட நானும் மாணவியாக கற்றுக்  கொள்கிறேன்.

கற்பனைக்கேற்றவாறு வண் ணங்களை மாற்றி அமைக்க வேண்டும். சேலைகளில் பெயின்டிங், ஜமிக்கி போன்ற எக்ஸ்ட்ரா ஒர்க்  செய்யப்பட்ட சேலைகளை பெண்கள் விரும்புகிறார்கள். இத‌னால் பிளைன் மற்றும் சாதாரண டிசைன் சேலைகளை எக்ஸ்ட்ரா ஒர்க் செய்து  விற்பதில் ஜவுளிக்கடைகள் ஆர்வம் காட்டுகின்றன. சேலைகளில் ஒர்க் செய்யத் தெரிந்தவர்கள் குறைந்த அளவில் உள்ளதால் நல்ல  கிராக்கி உள்ளது. ஜவுளிக் கடைகளில் ஆர்டர் கிடைத்தால் குழுவாக சேர்ந்து அதிகளவில் செய்ய வேண்டும். வீட்டின் முன் போர்டு  வைத்தால், தானாகவே வந்து கொடுப்பார்கள்.பல தொழில்நுட்ப உத்திகளை கற்பனை செய்து பார்த்து, அதை மற்றவர்களுக்கும்  கற்றுக்கொடுத்து வருகிறேன். இதில் பயனடைந்த பல பெண்கள் கைத்தொழிலாக செய்து பணம் சம்பாதித்துக்  கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்க்கிறபோது, கேள்விப் படுகிறபொழுது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தொழில் தொடங்க முதலீடு என்னவென்று  கேட்டால், தன் பத்து விரல்கள் மற்றும் கற்பனைத்திறன் என்றே சொல்லலாம்.முதலில் நம் வீட்டிலுள்ளவர்களுக்கும், அக்கம்  பக்கத்தினருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் செய்து கொடுக்கலாம். அவர்கள் மூலம் மற்றவர்களுக்குத் தெரிய வர இத்தொழிலை  விரிவுபடுத்தலாம். கல்லூரி மாணவிகளுக்கு டி-ஷர்ட், துப்பட்டா பெயின்டிங் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

என்ன டிசைன் தீட்டலாம்?

Pattachitra - ஒடிஷாவைச் சேர்ந்தது.
African Tribal figure
keral mural painting
Abstract design
Cone art - மத்தியப் பிரதேச கலை.
Madhubani - பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது.

Sinhalese art  என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.பெயின்டிங் செய்ய என்ன தேவையென்றால், துணி, ஃபேப்ரிக் பெயின்டுகள், ப்ரஷ்கள்  (ரவுன்ட், ஃப்ளாட்), லிக்விட் எம்ப்ராய்டர் லைனர்ஸ், Fabric Glue Embroidery frame, டிசைன், யெல்லோ கார்பன். முதலீடு என்றால் சுமார்  ரூ.3000/- மட்டும் போதும். ஒரு புடவை பெயின்ட் செய்ய டிசைனைப் பொருத்து ரூ.1500 லிருந்து ரூ.3000 வசூலிக்கலாம். 1 புடவை  செய்ய 3 நாட்கள் ஆகும். தினமும் 4 மணி நேர உழைப்பு. மற்ற துணிகளில் பெயின்ட் செய்ய 1 நாளே போதுமானது. ஆக, மாத இறுதியில்  ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை லாபம் பெற முடியும். டிசைனர் சேலை என்றால் இன்னும் கூடுதலாக தொகைப் பெற்றுக்கொள்ளலாம்.

வயது வரம்பு இல்லாத கலை. கற்பனைத் திறன் இருந்தால், யார் வேண்டுமானாலும் செய்யலாம். புதிதாக தொழிலில் இறங்குபவர்கள்  ஃபேப்ரிக் பெயின்டிங்கில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர் மற்ற டிசைன் வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின்டிங்  செய்வதற்கு முன்னதாக அதில் வரைய வேண்டிய படத்தை தேர்வு செய்ய வேண்டும். படத்தின் மீது டிரேசிங் பேப்பரை வைத்து  படத்திலுள்ள கோடுகள் மீது ஊசி மூலம் சிறிய ஓட்டைகள் போட வேண்டும்.

ஓட்டை போடப்பட்ட டிரேசிங் பேப்பரை சேலையில் வைத்து,  பேப்பரின் மீது மண்ணெண்ணெய் கலந்த கலர் பவுடரை தடவ வேண்டும். சேலையில் ஓவியத்துக்கான அவுட் லைன் கிடைக்கும். அதற்குள்  வண்ணங்களை வரைந்தால் ஃபேப்ரிக் பெயின்டிங் தயாராகி விடும். மொத்தமாக சேலைகளை வாங்கி, பெயின்டிங் உள்பட பல்வேறு டிசைன்  ஒர்க் செய்து பண்டிகை காலங்களில் அக்கம்பக்கத்தினருக்கு விற்கலாம். சுடிதார்களுக்கும் ஆர்டர் பிடிக்கலாம்.சேலையில் ஒர்க் செய்ய  தேவைப்படும் பொருட்களை மொத்தமாக வாங்கினால், உற்பத்தி செலவு குறையும். ஃபேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும்” என்கிறார் உஷா.

-தோ.திருத்துவராஜ்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!