சென்னை: மாவட்ட ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பது தொடர்பான அவசர சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான அவசர சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்தில் கூறியிருப்பதாவது: அரசு இயந்திரம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் கோவிட் - 19 திடீர் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை தணிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ளன. எனவே சிற்றொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும் சாதாரண தேர்தல்களையும் நடத்துதலுக்கான முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியவில்லை. மேலும் இடஒதுக்கீடு அறிவித்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை அறிவிக்கை செய்ய இயலும்.