9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு: அவசர சட்டம் நிறைவேற்றம்

சென்னை: மாவட்ட ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பது தொடர்பான அவசர சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான அவசர சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்தில் கூறியிருப்பதாவது: அரசு இயந்திரம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் கோவிட் - 19 திடீர் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை தணிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ளன. எனவே சிற்றொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும் சாதாரண தேர்தல்களையும் நடத்துதலுக்கான முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியவில்லை. மேலும் இடஒதுக்கீடு அறிவித்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை அறிவிக்கை செய்ய இயலும்.

மேற்கண்ட சூழ்நிலைகளில், தனி அலுவலர்களின் பதவிகாலமானது 2020 ஜூன் 30ம் தேதியன்று நிறைவடைவதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020 டிசம்பர் 31ம் வரையிலான மேலும் ஆறு மாத காலத்திற்கு அல்லது தேர்தலுக்கு பின்பு நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்கு தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்தது. மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் அந்த நேரத்தில் இல்லாத காரணத்தால் தமிழ்நாடு ஆளுநரால் 2020ம் ஆண்டு ஜூன் 30ம் நாள் அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு, 2020 ஜூலை 1ம் தேதி அரசு சிறப்புதழில் வெளியிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைப் போன்று 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் அவசர சட்டமும் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Related Stories: