சென்னை: அரசின் தடையில்லா சான்று இல்லாமல் வேளாண் படிப்புகளை துவங்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய கல்லூரிகள் தொடங்க வேண்டுமானால், 110 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள ஒன்பது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்த விதிமுறைகளையும், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளையும் பின்பற்றாமல் வேளாண் படிப்புகளை துவங்கியுள்ளதாக கூறி, சுயநிதி வேளாண் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.