போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல நட்சத்திர தம்பதி: கர்நாடக குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக கன்னட நட்சத்திர ஜோடிகளான திகந்த், அன்ட்ரிடா ராய் ஆகியோரிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்னணி நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி மற்றும் தொழிலதிபர் ராகுல் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரையுலகில் பிரபலமான திகந்த், அன்ட்ரிடா ராய் தம்பதிக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனால் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக குற்றப்பிரிவு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர். இதனையடுத்து நட்சத்திர தம்பதி திகந்த், அன்ட்ரிடா ராய் ஆகியோர் பெங்களுருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு இன்று காலை வந்தனர். அவர்களை புகைப்படம் எடுக்க ஏராளமானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போதைப்பொருள் தொடர்பாக இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைதான நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படியில் திகந்த், அன்ட்ரிடா ராய் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரும் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: