சென்னை: பெசன்ட்நகரில் மீன் அங்காடி அமைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் (திமுக) பேசும்போது, “பெசன்ட்நகரில் உள்ள ஓடைமா நகர் குப்பத்தில் மீனவ மக்கள் கடற்கரை அருகே மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தரமாக மீன் அங்காடி கட்டித்தர அரசு முன் வருமா?” என்றார். அமைச்சர் ஜெயக்குமார்: ஏற்கனவே ஒரு மீன் அங்காடி திருவான்மியூர் பகுதியில் உள்ளது. பெசன்ட்நகரில் போதிய இடவசதி இருந்தால் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் வலியுறுத்தி மாநகராட்சி மூலமாக ஆய்வு செய்து அங்கு மீன் அங்காடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.