ஜவுளிக்கடையில் நூதன கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர்  ஆட்டந்தாங்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (55). இவர் எம்.ஏ.நகர் திருவள்ளூர் கூட்டுச் சாலையில்  துணிக்கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் ₹30 ஆயிரம் மதிப்பிலான துணிகளை வாங்கினர். பின்னர் அதற்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களிடம், “கடை உரிமையாளர் ராஜேஷ்தானே. அவருக்கு போன் போட்டுக்கொடுங்கள்” என கூறினர். உரிமையாளர் பெயரை மாற்றி சொன்னதால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஹரிக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஹரி அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளுமாறு கூறினார். அப்போது, துணிகளை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிய மர்ம ஆசாமிகளை ஊழியர் கீர்த்தி ராஜா என்பவர் தடுத்தார். இதனால் அவரை கீழே தள்ளிவிட்டு தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, செங்குன்றம் போலீசில் கடை உரிமையாளர் ஹரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.   

Related Stories: