தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் காலனியில் அரசு கட்டி தந்த தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் இருப்பதால், உயிர் பயத்தில் கிராம மக்கள் அங்குள்ள கோவிலுக்கு குடியேறி இருக்கின்றனர். தருமபுரி மாவட்டம் தடங்கம் காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டி தந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. பல வீடுகளில் கான்கிரிட் கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.
இதனால் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வந்தவர்கள், உடமைகளை எடுத்துக்கொண்டு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் தஞ்சமடைந்திருக்கின்றனர். ஆபத்தான நிலையில் வீடுகள் இருப்பது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், குழந்தைகளுடன் வீடில்லாமல் தவித்து வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவிலில் தற்போது தஞ்சமடைந்திருந்தாலும் மழை பெய்யும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கிராம மக்கள் கண்ணீர் மல்க கவலை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, அரசு இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து விட்டு வனத்தில் குடியேறப்போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.