மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு விவகாரம்: தமிழக அரசின் மனுவுக்கு இன்று பதிலளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் கலந்தாய்வை நடத்தி முடிக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த  மனுவிற்கு இன்றைக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள  இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து சில மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மருத்துவ மேற்படிப்பு மாணவர்  சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம். இதில் ஆகஸ்ட் 31க்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என உச்ச  நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

அதனால் இதுதொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு வேண்டுமென்றால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’ என  கடந்த 2ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட அனுமதியை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை ஆகஸ்ட் 31க்குள் நடத்தி  முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழல் சரியான முறையில் இல்லாததால் கலந்தாய்வை நடத்தி  முடிக்க மேலும் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  “மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடத்தி முடிக்கும் விவகாரத்தில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவிற்கு  மத்திய அரசு நாளைக்குள் (இன்று) தங்களது பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு  ஒத்திவைத்தனர்.

Related Stories: