தேனாம்பேட்டை - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தேனாம்பேட்டை - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களை சூட்டினார்.அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்” எனவும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்” எனவும், கோயம்பேடு ரயில் நிலையத்திற்கு “புரட்சி தலைவி டாக்டர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் நிலையம்” எனவும் மாற்றப்பட்டது.சென்னையின் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த திட்டத்திற்கு காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு “டாக்டர் கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் வைக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனு தள்ளுபடி

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்று கூறி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: