நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனி நிறுவனம்: அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி அறிக்கை

சென்னை: அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனி நிறுவனம் அமைப்பது தொடர்பான அறிக்கையை சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதுதவிர தமிழகத்தில் உள்ள நகர்ப்புறங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.468 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விற்பனை வருவாயும் குறைந்து கொண்ட வருகிறது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும், அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்த நிதி திரட்ட ஒரு தனி நிறுவனம் அமைக்க முடிவு செய்தது. இதை தவிர்த்து ஒருங்கிணைந்த உணவுக்கூடம் அமைப்பது, தேநீர் உள்ளிட்ட சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் வகையில் பாலகம் அமைப்பது, அம்மா உணவக கட்டிடங்களில் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி நிறுவனம் அமைக்க அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8ன்படி வர்த்தகம், கலை, அறிவியல், விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, சமூக நலன், மதம், தொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாத்தல் அல்லது இதுபோன்ற தொடர்புடைய குறிக்கோள்களை மேம்படுத்துவதற்காக ஒரு நிறுவனம் தொடங்கலாம். இந்த பிரிவின்கீழ் அம்மா உணவகங்களை நிர்வகிக்க நிறுவனம் தொடங்குவதற்கு அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: