சென்னை: நீர்வள ஆதாரங்களை சீரமைத்தல் கழகத்துக்கு தலைவர் மட்டுமே உள்ள நிலையில் ₹6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று வரை அது காகித அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் பெரிய அளவிலான நீர்வளப்பிரிவு திட்டபணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு 2018 டிசம்பரில் தமிழக அரசு ஏற்படுத்தியது. இந்த கழகத்துக்கு நிரந்தர தலைவராக சத்யகோபாலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கழகத்துக்கு 4 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியளர், 2 செயற்பொறியாளர், 1 கம்பெனி செயலாளர், நிதி ஆலோசகர் உட்பட 19 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தற்போது வரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.