சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு பிரேத பரிசோதனை கோரியும் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ஆய்வாளர் நடராஜனின் விசாரணை அறிக்கை சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். அதனால் ஆய்வாளர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து விசாரணையை வரும் 14ம் தேதிக்கு (நாளை) நீதிபதி தள்ளிவைத்தார்.