நடிகர் அளித்த புகாரின் பேரில் போதை வழக்கில் கங்கனாவை விசாரிக்க சிவசேனா அரசு உத்தரவு

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்தை விசாரிக்க மும்பை போலீசுக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் பாலிவுட் திரையுலகினர் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை மகாராஷ்டிரா அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார் கங்கனா ரனவத். ‘கங்கனாவை மும்பைக்குள் நுழைய விட மாட்டோம்’ என சிவசேனா தலைவர்கள் எச்சரித்தனர். ‘மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்தப் பார்’ என அவர்களுக்கு ஒருமையில் கங்கனா சவால்விட்டார். இதற்கிடையே கங்கனாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. அவர் கடந்த 9ம் தேதி மும்பைக்கு வந்தபோது, விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கூறி அவரது அலுவலகத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்தது.

 இந்நிலையில் கங்கனா போதை பொருள் பயன்படுத்தியதாக புகார் உள்ளது எனக் கூறி அவர் மீது வழக்கு தொடர சிவசேனா எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் அத்யாயன் சுமன், கங்கனா போதை மருந்து பயன்படுத்தியதாகவும் தன்னையும் போதை மருந்து பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் புகார் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதன்பேரில்தான் கங்கனா மீது வழக்கு தொடர கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கங்கனாவை விசாரிக்குமாறு மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்களில் நடித்த டயானா ரிக் மரணம்

பல ஹாலிவுட் படங்களில் நடித்த இங்கிலாந்து நடிகை டயானா ரிக் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.ஜேம்ஸ்பாண்ட், கேம் ஆப் த்ரோன்ஸ், அவெஞ்சர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த நடிகை டயானா ரிக். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பல னின்றி நேற்றுமுன்தினம் இறந்தார்.

வடிவேலு பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி, நேற்று முன்தினம் திடீர் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கை,கால் செயலிழந்த நிலையில் அரசு பொதுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் அவர் இறந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 வடிவேலு பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு விஜய்சேதுபதி நிதி உதவி வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயனோடு காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தவர் வடிவேலு பாலாஜி. இருவரும் நெருக்கமான நண்பர்கள். இருவருக்குமான நெருக்கத்தை பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவரது மகள், மகன் இருவரின் படிப்பு செலவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார். மேலும் சில நடிகர், நடிகைகள் வடிவேலு பாலாஜி குடும்பத்திற்கு நிதி உதவி அளித்துள்ளனர்.

Related Stories: