உடல்நலக்குறைவால் மரணமடைந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு சக கலைஞர்கள் நேரில் அஞ்சலி!: ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் என பிரபலங்கள் உருக்கம்..!!

சென்னை: வடிவேல் பாலாஜியின் உடலுக்கு சக கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று மரணமடைந்தார். நகைசுவை நடிகராக தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்த அவரது மரணம் சின்னத்திரை கலைஞர்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேரடியாகவும், வீடியோ மூலமாகவும் தொடர்ந்து அவரது நினைவுகளையும், அஞ்சலிகளையும் சக கலைஞர்கள் செலுத்தி வருகின்றனர். உடல்நலக்குறைவால் மரணமடைந்த வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அவருடன் பணியாற்றிய நடிகர்கள், சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வடிவேல் பாலாஜிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் வடிவேல் பாலாஜியின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக சிவகார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். அதேபோல் அவரது இனிய நண்பரும், சக நடிகருமான ராமரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கர், ஆர்த்தி, சேது உள்ளிட்ட நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும் வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் தாடி பாலாஜி, பெப்சி சங்கத்தினர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம், அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். வடிவேல் பாலாஜிக்கு நிகராக யாருமில்லை என சேது உருக்கம் தெரிவித்துள்ளார், வடிவேல் பாலாஜியின் உடலுக்கு இன்று மதியம் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Related Stories: