கோயம்பேடு பழ மார்க்கெட் திறப்பதை பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறக்கும் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து, அனைத்து மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க அனுமதிக்க கோரி கோயம்பேடு 4வது நுழைவாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் செயலாளர் எம்.செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அனுமதித்ததுதான் கொரோனா பரவ காரணமாக இருந்தது. மொத்த விற்பனையை அனுமதிப்பதில் சிக்கல் இல்லை. மொத்த விற்பனை அங்காடியில் கடை வைத்துள்ளவர்களையும், பதிவு செய்துள்ளவர்களையும் விற்பனையில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென்று ஆகஸ்ட் 31ம் தேதி சி.எம்.டி.ஏவிடம் மனு கொடுத்தோம். 700க்கு மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள் என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சங்கத்தின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் அரசு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: