தமிழக மீனவர்களை தாக்கி வலைகள் பறிப்பு இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

வேதாரண்யம்: ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்புகம்பியால் தாக்கி ரூ.3லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்துச் சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுதுறை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கோபி (46), சுகுமாறன் (42), வேலவன் (45), காளிதாஸ் (20) ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் மீன்பிடிக்கச் சென்று கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் இரண்டு படகில் வந்து மீனவர்களை காமகுரோத வார்த்தைகளால் திட்டி அவர்கள் படகில் வைத்திருந்த டார்ச்லைட், திசைகாட்டும் கருவி, 20 லிட்டர் டீசல், 600 கிலோ எடையுள்ள ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்துச் சென்று விட்டனர். மேலும் கோபி என்ற மீனவரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்தும், சுகுமாறன் வேலவனை ஆகியோரை தாக்கியும் விரட்டி அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கரைதிரும்பி பஞ்சாயத்தாரிடம் விபரம் தெரிவித்துவிட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: