வடபழனி முருகன் கோயில் வடக்கு மாட வீதியில் பார்க்கிங் பணி தொடர கூடாது: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வடபழனி முருகன் கோயில் வடக்கு மாட வீதியில் வாகன நிறுத்தம் (பார்க்கிங்) அமைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை தொடரக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனி முருகன் கோயில் வடக்கு மாட வீதி 40 அடி அகலம் கொண்டது. இதில், 18 அடி அகலத்திற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியில்  மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த முடிவை கைவிடக்கோரி வடக்கு மாட வீதியில் வசிக்கும் எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கோயில் வாகன நிறுத்தத்திற்காக 4 இடங்களில் சுமார் 150 கிரவுண்ட் நிலம் உள்ள நிலையில், ஆளுங்கட்சி பிரமுகரின் தூண்டுதலால்  வடக்கு மாட வீதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வடக்கு மாட வீதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடரக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: