புதுடெல்லி: சீனாவின் பப்ஜி மொபைல் கேம் உட்பட 118 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 பேரும் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீனாவை சேர்ந்த 106 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 29, 30ம் தேதிகளில் லடாக்கின் பாங்காங்க் திசோ ஏரிப்பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. இதற்கும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதன் எதிரொலியாக, சீனாவை சேர்ந்த பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று அதிரடி தடை விதித்தது.