சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை!!!

சென்னை:  சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையானது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரவுடி சங்கரை கஞ்சா வழக்கில் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து, அதனை எடுத்து செல்லும்போது திடீரென ரவுடி சங்கர் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதலில் என்கவுண்டர் செய்யப்பட்டகாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதாவது போலீஸ் திட்டமிட்டு சங்கரை கொலை செய்து விட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து இதுதொடர்பாக தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அதில், ரவுடி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதுதொடர்பாக தமிழக அரசு பதிலளித்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அயனாவரத்தில் இந்த வழக்கானது 176 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு விசாரணையானது தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய ஆய்வாளர் நடராஜன் மற்றும் தனிப்படையை சேர்ந்த 5 காவல் துறையினர் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணையை சி.பி.சி.ஐ.டி. தொடங்கியுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கும் சென்று விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக உறவினர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில், போலீசார் மீது குற்றம் சாட்டுகின்றனரோ , அது தொடர்பான ஆதாரங்களையும் பெற உறவினர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: