திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி தம்பதி பலியாகினர்.இதைகண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவொற்றியூர் பீர் பயில்வான் தர்கா தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (38), ஸ்டீல் பட்டறை ஊழியர். இவரது மனைவி பெனாபேகம் (30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஷாஜகான் தனது மனைவியுடன் எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது.இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து திரண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, துறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் இதை கண்டுகொள்வதில்லை என்றும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.