சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரபல ரவுடியான ரவுடி சங்கர் மீது பல்வேறு கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் மாமூல் வசூலித்தல், கட்டப்பஞ்சாயத்து என அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டி வந்தனர். ஆனால், அவர், காவல்துறையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, ரவுடி சங்கரை பிடிக்க அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான தனிப்படை அடைத்து அவரை பிடிக்க தேடி வந்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் முதல்நிலை காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடியை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.