பைக் மீது வேன் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாப பலி: 5 பேர் படுகாயம்

செய்யூர்: செய்யூர் அருகே ஆறு பேர் சென்ற இருசக்கர வாகனம் மீது  வேன் மோதியதில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (28). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் செய்யூர் அடுத்த ஜல்லிமேடு பகுதியில் குடியேறி தனது குடும்பத்தினருடன் பல்வேறு பகுதிகளில் கிணறு வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை முருகன் இருசக்கர வாகனத்தில் மனைவி கற்பகம் (25), மகள்கள் லட்சுமி (4), செல்வி (5), ஒன்றரை வயது மகன் விஜய் மற்றும் தனது அண்ணன் மனைவி சுகந்தி (30) ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஆக்கிணாம்பேடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்திசையில் சோழிங்கநல்லூரில் இருந்து பாளையம் நோக்கி வந்த பயணிகள் வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் முன்னால் அமர்ந்து வந்த சிறுமி லட்சுமி சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: