கடலூர் அருகே மளிகை கடையில் அரிவாளை காட்டி மிரட்டல் - சி.சி.டி.வி காட்சியுடன் புகார் அளித்ததால் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!!!

கடலூர்: கடலூரில் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு வீச்சரிவாளுடன் கடைக்காரரை மிரட்டும் சிசிடிவி கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம் முதுநகரில் ராஜா என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே தெருவில் வசித்து வரும் இமயன் என்பவர் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு ராஜாவிடம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால் கடைக்காரர் கடனுக்கு பொருட்களை தர மறுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீச்சரிவாளுடன் மீண்டும் கடைக்கு வந்த இமயன் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ராஜாவை தாக்க முயற்சித்துள்ளார்.

இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து கடனுக்கு மளிகை பொருட்கள் கேட்டு வீச்சரிவாளுடன் மிரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து இதுபோன்ற அத்துமீறிய செயலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர் சிசிடிவி காட்சியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் இமயனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: